சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தினால் சுண்டிக்குளம், கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இரண்டு (02) மீனவர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய கொண்ணான்தீவு, முல்லியான் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், குறித்த சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.