இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

மன்னாருக்கு அப்பால் கடலில் 2024 ஜனவரி 16 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வட மத்திய கடற்படை கட்டளைகளின் கடற்படையினர் 2024 ஜனவரி 16 ஆம் திகதி குறித்த கடற்படை கட்டளைகளின் விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது மன்னாருக்கு அப்பால் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் 18 இந்திய மீனவர்கள் இவ்வாரு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 18 இந்திய மீனவர்கள் தலைமன்னார் தால்பாடு இரங்குதுறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.