இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு
 

இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் இன்றய தினம் (டிசம்பர், 19 ) நிறைவுற்றது. இச்செயற்பாடுகள் இவ்வருடம் அக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜ் இன் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வளவீடு, கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பிராந்திய கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரை விஸ்தரிக்கப்பட்டது. குறித்த தரவு சேகரிப்பானது, 2004ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட வரைபட மாற்றத்தை அறிந்துகொள்ள உதவியாக அமையும்.இதேவேளை, அடுத்த வருடம் கிரேட் பேசஸ் இலிருந்து சங்கமன்கந்த வரை மூன்றாவது கட்ட நீரளவியல் கணக்கெடுப்பினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நீரளவியல் கணக்கெடுப்பின் அறிக்கைகளை கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஐஎன்எஸ் சுல்டேஜ் கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் திரிபுவன் சிங் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்களிடம் கையளித்தார். குறித்த நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.